Posted Date : 07:46 (17/06/2014)Last updated : 11:57 (17/06/2014)
காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள பழையனூரை சேர்ந்தவர் ராஜலெட்சுமி. கிராம சுகாதார செவிலியராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் லோகநாதன் (வயது 27). இவர் என்ஜினீயரிங் முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். வேலை கிடைக்கும் வரை வருமானத்திற்காக டிரைவர் வேலை செய்துவந்தார்.
கடந்த 11 ஆம் தேதி லோகநாதன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, பட்டாளம் என்ற பகுதியில் டேங்கர் லாரி மோதியதில் படுகாயம் அடைந்தார். உடனே அவர் செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், நேற்று காலை 6.55 மணிக்கு லோகநாதன் மூளைச்சாவு அடைந்தார்.
லோகநாதனின் இருதயத்தை ஹவோபியாவிற்கு வழங்க முடிவானது. இருதயத்தை விரைவாக கொண்டு செல்வது குறித்து டாக்டர்கள் போலீசாருடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் நேற்று மதியம் 2 மணிக்கு லோகநாதனின் உடல் உறுப்புகள் அரசு மருத்துவமனையில் பிரித்து எடுக்கப்பட்டது. இதில் 20 டாக்டர்கள் ஈடுபட்டனர். மாலை 5.35 மணி அளவில் லோகநாதனின் உடலில் இருந்து இருதயம் பிரித்தெடுக்கப்பட்டது.
ஆம்புலன்சு செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு சரியாக 13 நிமிடம் 22 வினாடிகளில் மலர் மருத்துவமனையை அடைந்தது. அங்கு டாக்டர்கள் குழுவினர் இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் ஹவோபியாவிற்கு பொருத்தினர்.
லோகநாதனின் 2 கண்கள் எழும்பூர் கண் மருத்துவமனைக்கும், 2 சிறுநீரகங்கள் அடையாறு மலர் மருத்துவமனைக்கும், கல்லீரல் வேலூர் அரசு மருத்துவமனைக்கும், தோல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள ரைட் மருத்துவமனைக்கும் தானமாக கொடுக்கப்பட்டது. லோகநாதன் உடல் உறுப்புகள் மூலம் 7 பேர் மீண்டும் மறுவாழ்வு பெற முடியும்.
2008 ஆம் ஆண்டு மூளைச்சாவு உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தினை தமிழக அரசு செயல்படுத்தியது. இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை 76 இருதயங்கள், 861 சிறுநீரகங்கள், 37 நுரையீரல்கள், 1 கணையம், 500 இதய வால்வுகள், 730 கண்கள் மற்றும் 1 தோல் ஆகியவை தானமாக பெறப்பட்டுள்ளன.
லோகநாதனின் இருதயம் வெற்றிகரமாக இளம்பெண் ஹவோபியாவுக்கு பொருத்தப்பட்டதாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறுகையில், ''மாற்று இருதயம் பொருத்தப்பட்ட ஹவோபியா நலமுடன் உள்ளார்.
15 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு, மாற்று இருதயம் பொருத்தும் சிகிச்சையை செய்தது. மாற்று இருதயம் பொருத்தப்பட்ட பெண் இன்னும் 5 நாட்களுக்கு ஐ.சி.யூ.வில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பார். விரைவில் ஹவோபியா நலமுடன் வீடு திரும்புவார்" என்றனர்.
15 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு, மாற்று இருதயம் பொருத்தும் சிகிச்சையை செய்தது. மாற்று இருதயம் பொருத்தப்பட்ட பெண் இன்னும் 5 நாட்களுக்கு ஐ.சி.யூ.வில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பார். விரைவில் ஹவோபியா நலமுடன் வீடு திரும்புவார்" என்றனர்.